தமிழ் திரையுலகில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் வாரிசு படத்தில் விஜய் ஜோடியாக நடித்திருந்தார்.
மேலும் தெலுங்கு, இந்தி படங்களிலும் நடிக்கிறார் ராஷ்மிகா. இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், “எனக்கு காலை சிற்றுண்டியில் ஆம்லெட் இருக்க வேண்டும். உணவில் காய்கறிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பேன். அரிசி சாதம் குறைவாக சாப்பிடுவேன். தோசை என்றால் ரொம்ப பிடிக்கும்.
மதிய உணவில் சூடான ரசத்துடன் சாதம் கலந்து ஒரு பிடி பிடிப்பேன். சவுத் இந்தியன் தாலிக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். இரவு உணவு கொஞ்சமாக இருக்கும். எல்லா விஷயங்களிலும் ஒழுக்கமாக இருக்கும் நான் சீக்கிரமாக தூங்கி அதிகாலையில் எழுந்து விடுவதை மட்டும் இன்னும் பழக்கப்படுத்திக்கொள்ளவில்லை.
படப்பிடிப்பு இருந்தால் மட்டும் காலையிலேயே எழுந்து ஏழு மணிக்கு எல்லாம் செட்டில் இருப்பேன். பார்ட்டி, பப் போன்றவற்றுக்கு செல்லும் பழக்கம் இல்லை. இரவு தாமதமாக தூங்குவதற்கு காரணம் ஓ.டி.டி.தான். ஏதாவது வெப் தொடர் பார்த்தால் அது முடியும் வரை தூக்கம் வராது” என தெரிவித்துள்ளார்.
