கமல்ஹாசன் நடித்து கடந்த வருடம் வெளியான ‘விக்ரம்’ படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார் கமல்.
இந்த படத்துக்கு பிறகு இயக்குனர் மணிரத்னம் இயக்கும் படத்தில் கமல்ஹாசன் விரைவில் நடிக்கவுள்ளார். கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் 1987-ல் நாயகன் படம் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. 36 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் புதிய படத்தில் இணைந்துள்ளனர். இந்த படத்தில் அனைத்து மொழிகளில் இருந்தும் முன்னணி நடிகர்களை நடிக்க வைக்கவும் திட்டமிட்டு உள்ளனர்.
அதன்படி மலையாள நடிகர் மம்முட்டி, இந்தி நடிகர் ஷாருக்கான் ஆகியோரை நடிக்க வைக்க முடிவு செய்து இருப்பதாகவும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

மேலும் தெலுங்கு, கன்னட திரையுலகில் இருந்தும் பிரபல நடிகர்களை நடிக்க வைக்க உள்ளனர். மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் ஏப்ரல் 28-ந்தேதி வெளியாக இருக்கிறது. அதன் பிறகு KH234 படப்பிடிப்பு தொடங்கும்.