லிங்குசாமியின் அடுத்த படத்தில் சூர்யா நடிக்கிறாரா? பதறிய ரசிகர்கள்!

லிங்குசாமி – சூர்யா கூட்டணி குறித்து வெளியான தகவல்!

லிங்குசாமி இயக்கத்தில், ராம் பொதினேனி – கிருத்தி ஷெட்டி நடிப்பில் வெளியான ‘தி வாரியர்’ திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. இந்நிலையில் லிங்குசாமியின் அடுத்த படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Suriya, Lingusamy 19-July-2022

சூர்யா நடிப்பில், லிங்குசாமி இயக்கத்தில், யுவன் இசையமைப்பில் உருவான ‘அஞ்சான்’ திரைப்படம் 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீஸான நிலையில், படுதோல்வி அடைந்தது. திரைக்கதைக்கு முக்கியத்துவமே இல்லாமல் எடுக்கப்பட்ட அஞ்சானை இணையத்திலும், பத்திரிகைகளிலும் கடுமையாக விமர்சித்து எழுதியிருந்தனர்.

அதுமட்டுமில்லாமல் படத்தின் இயக்குனர் லிங்குசாமி கொடுத்த பில்டப்புகளை நம்பி சென்றவர்கள் ஏமாந்ததால் அவரைப் பற்றி மீம்ஸ்களாகப் போட்டு இணையத்தை தெறிக்கவிட்டனர். அந்த படத்தில் சறுக்கிய லிங்குசாமி இன்னமும் தலைதூக்கவில்லை. அந்த அளவுக்கு தமிழ் சினிமா கண்டிராத தோல்வியை கண்டது ‘அஞ்சான்’. அதன் பின்னர் அவர் விஷாலை வைத்து இயக்கிய சண்டக்கோழி 2 திரைப்படமும் பெரிதாக பேசப்படவில்லை.

இந்நிலையில் ‘தி வாரியர்’ படத்தின் ரிலீஸ்க்கு முன்பே கலவையான விமர்சனங்களை பெற்றுவந்த நிலையில், சூர்யா மீண்டும் லிங்குசாமி இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்து, அவரிடம் கதை கேட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது அப்படி எதுவும் நடக்க சாத்தியமில்லை என்று கூறப்படுகிறது. மேலும் சூர்யா தரப்பில் இருந்து இது சம்மந்தமாக பல ஊடகங்களுக்கு, அடுத்து லிங்குசாமி இயக்கத்தில் நடிக்கவில்லை என்று சற்று தாமாகவே முன்வந்து சொல்லுவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.