மீண்டும் சிம்புவுடன் இணையும் கெளதம் மேனன்!
கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்புநடித்த “விண்ணை தாண்டி வருவாயா” மற்றும் “அச்சம் என்பது மடமையடா” வெற்றியை தொடர்ந்து மீண்டும் சிம்புவும் கெளதம் மேனனும் இணைந்திருக்கும் புதிய படமான “வெந்து தணிந்தது காடு” உருவாகிக்கொண்டிருக்கிறது.

இப்படத்துக்கு எ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.கெளதம் மேனன் இயக்கத்தில், ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
“வெந்து தணிந்தது காடு” படத்துக்காக கவிஞர் தாமரை பாடலாசிரியராக ஒப்பந்தமாகியுள்ளார் என்பதும் கலை இயக்குனராக ராஜிவ் நாயரும் உடை வடிவமைப்பாளராக கௌதம் மேனனின் தங்கை உத்தாரா மேனனும் பணிபுரிகின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது. சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் திருச்செந்தூரில் ஆரம்பமாகியுள்ளது. பின்னர் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது.

இப் படத்தின் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றது. இந்த படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் மும்மரமாக நடந்து வந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சிம்பு,கௌதம் மேனன் ஆகியோர் நடிகை ராதிகாவுடன் எடுத்த BTS புகைப்படத்தை படத்தின் தயாரிப்பாளர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் இந்த படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு நாளை (09.02.2022) முதல் ,மும்பையில் நடைபெற உள்ளதாகவும் இதற்காக சிம்பு மும்பை புறப்பட்டு சென்றுள்ளதாக நம்பத்தகுந்த சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக குஜராத்தைச் சேர்ந்த தெலுங்கு நடிகை “சித்தி இத்னானி” நடிப்பதாக சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. சிம்பு பிறந்தநாளுக்கு இந்த படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.

கௌதம் மேனனுடன் எழுத்தாளர் ஜெயமோகன் இந்த படத்திற்காக முதல் முறையாக இணைந்துள்ளார். இவர் ஏற்கனவே நான் கடவுள், அங்காடி தெரு, 2.O, பாபநாசம், சர்கார், இந்தியன்-2, பொன்னியன் செல்வன், விடுதலை உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். இவரின் அக்னி குஞ்சொன்று கண்டேன் எனும் சிறுகதையே இப்போது “வெந்து தணிந்தது காடு” என்று படமாக்கப்பட்டு வருவதாக தெரிகின்றது.

இப்படம் தூத்துகுடியில் இருந்து கொத்தடிமையாக மும்பை செல்லும் தமிழ் இளைஞனுக்கு நடக்கும் சம்பவங்களே கதைக்களமாக இருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது. இந்த படத்தின் Glimpse வீடியோ Journey of Muthu என்ற பெயரில் ஏற்கனவே ரிலீசாகியுள்ளது. இந்த படத்தின் ஆடியோ உரிமையை திங்ஃக் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.