லதா மங்கேஷ்கர் நேற்று காலமானார்

இந்தியாவின் இசைக் குயில்க்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் இரங்கல்

லதா மங்கேஷ்கர் 1929-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ந் தேதி மத்திய பிரதேசத்தில் பிறந்தார். அவரது இயற்பெயர் ஹேமா. அவரது தந்தையின் நாடகங்களில் லத்திகா என்னும் பாத்திரத்தில் அவர் நடித்து வந்தார். அதனால் அனைவரும் அவரை லதா என்று அழைக்கத் தொடங்கினர். லதா மங்கேஷ்கர் இந்தி, தமிழ் உள்ளிட்ட 36 மொழிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். அவர் தனது 13-வது வயதில் பாடல்களை பாடத் தொடங்கினார். 1942-ம் ஆண்டு முதல் பாடலை பாடினார். ‘மகள்’ என்ற இந்தி திரைப்படத்தில் 1949-ம் ஆண்டு முதல் சினிமா பாடலை பாடினார்.

தமிழில் கமல்ஹாசனின் சத்யா படத்தில் ‘வளை யோசை கலகலவென’, பிரபுவின் ஆனந்த் படத்தில் ‘ஆராரோ ஆராரோ’ கார்த்திக்கின் என் ஜீவன் பாடுது என்ற படத்தில் ‘எங்கிருந்தோ அழைக்கும் என் ஜீவன் போன்ற பாடல்களை பாடினார். அவர் மராத்தி மற்றும் இந்தியில் 8 திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 1999-ம் ஆண்டு நவம்பர் முதல் 2005-ம் ஆண்டு நவம்பர் வரை மேல்சபை எம்.பி.யாக பதவி வகித்துள்ளார். 1969-ம் ஆண்டு பத்மபூஷண் பட்டத் தையும், 1999-ம் ஆண்டு பத்மவிபூஷண் பட்டத்தையும் பெற்றுள்ளார்.

சினிமா துறையில் மிகவும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை 1989-ம் ஆண்டு பெற்றிருந்தார். நாட்டின் உயரிய விருதான பாரதரத்னா விருது அவருக்கு கடந்த 2001-ம் ஆண்டு வழங்கப்பட்டது. சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதை 3 முறை பெற்றுள்ளார். மேலும் பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். திரைப்பட உலகின் மூத்த பாடகி இந்தியாவின் இசைக் குயில் லதா மங்கேஷ்கர் (வயது 92) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த சில தினங்களாக லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக் கிடமாகவே இருந்தது. நேற்று காலையில் லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்து அவர் காலமானார்.

லதா மங்கேஷ்கர் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகை காஜல் அகர்வால், நடிகை ஜெனிலியா, நடிகை தமன்னா, நடிகை ஹன்சிகா, நடிகர் விக்ரம் பிரபு, பாடகி சின்மயி போன்ற பலர் அவர்களுடைய அஞ்சலியை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.